புதுச்சேரி: “யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை ஆகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கார் மூலம் வந்தார். புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோரிமேடு காவலர் மைதானம் வந்தார்.

அங்கு நடைபெற்ற விழாவில் காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி விருதை வழங்கி பேசினார். விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து, ராஜசேகர் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா அரங்கத்துக்குள் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைவரும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி காவல்துறையின் பேண்ட்குழு அணிவகுப்பு இசை மற்றும் தேசிய கீதம் உள்ளிட்டவை இசைத்தனர்.போலீஸாரின் கெடுபிடி காரணமாக குறைந்த அளவில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் வெகு சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. 4 பிராந்தியமாக பிரிந்துள்ள புதுவை மாநிலத்தில் போலீஸ்துறை சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து வருகிறது.

குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி சாதாரணமானது அல்ல, மிகவும் பெருமை தரக்கூடியது. புதுவை போலீஸ்துறையில் 5 ஆயிரம் பேர் மட்டுமே இருந்தாலும், மண்ணின் ஆன்மிகம், பாரம்பரியம், மரபு, ஆகியவற்றுடன் சட்டம் ஒழுங்கும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. போலீஸ் துறையின் வீரம், தீரம், அர்ப்பணிப்பு காரணமாக இந்த விருது, கவுரவரம், மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் 12 ஆண்டு தொலைநோக்கு பார்வை. புதுவையை பொறுத்தவரை மோடியின் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ரூ.2 ஆயிரத்து 500 கோடியில் சாலை விரிவாக்க திட்டம், ரூ.2 ஆயிரத்து 200 கோடியில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புதுவை விமான நிலையம் 34 மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

1950 முதல் 2014 வரை புதுவைக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13 ஆயிரத்து 762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டுகளில் 4 மடங்கு நிதியை பிரதமர் மோடி அரசு புதுவைக்கு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ.39 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதுவையில் 7.7 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமர் மோடி அரசு உங்களின் தோளோடு தோள் நின்று புதுவை மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். புதுவை டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை ஜனாதிபதியின் வண்ண விருது பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

Related

“கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி!”