12-ஆவது  தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

12-ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) திட்ட இயக்குநர் செல்வி.சங்கீதா முன்னிலையில்   சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவிக்கையில், இந்தியாவின் கைத்தறி தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம், தனித்தன்மை,  நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி துறையின் பங்களிப்பு மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திடவும், அவர்களின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்திடவும் சேமிப்பு மட்டும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு பங்களிப்புடன் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 10 நெசவாளர்களுக்கு ரூ.6,57,369/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் முத்ரா திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50,000 வீதம் 5 லட்சத்திற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

கைத்தறி தொழிலில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற நெசவாளர்களின் குடும்பத்தினை பாதுகாத்திடும் வகையில் குடும்ப ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் 5 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை  வழங்கப்பட்டது.
நெசவாளர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அருப்புக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கான பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், பல் மருத்துவம், கண், எலும்பு மற்றும் மூட்டு, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இசிசி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.

பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும்  நெசவாளர்களின் தொழில்களைப்  பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது)  பிரிதௌஸ் பாத்திமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் பழனி குமார், கைத்தறி அலுவலர்   வி.விஸ்வேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Related

“ஆண்டிபட்டி அருகே 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடையடைப்பு”