தேனி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்ற 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா.

தவறான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது  சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக சிறுவனுக்கு சுவாச குழாய் வழியாக செலுத்தப்பட வேண்டிய டியூபை தவறுதலாக உணவு குழாய் வழியாக செலுத்தி தவறான சிகிச்சை மேற்கொண்டதால் சிறுவனின் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.  இதனை அடுத்து சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ள சிறுவனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா.

சிறுவனின் குடும்பத்தாருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து கோமா நிலையில் உள்ள சிறுவனை பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, 

சிறுவன் கடந்த 54 நாட்களாக கோமா நிலையில் உள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சருக்கு இது குறித்து தகவல் தெரிவித்ததின் பேரில் மருத்துவ இணை இயக்குனர் மூலம் சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார் என தெரிவித்தார். சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”