தேனி,ஆக.1- அருள்மிகு குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பிரம்மோற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடைபெற்றது.
சனீஸ்வர பகவானின் மனைவியான நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால், ஒரு கும்பத்தில் நீலாதேவியின் அம்சத்தை நிலைநிறுத்தி, பச்சை பட்டு உடுத்தி, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்தக் கும்பத்திற்குச் சனீஸ்வர பகவான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு பூஜிக்கப்படும் நீலாதேவியின் உருவம், திருக்கல்யாணம் நடந்த நாளிலிருந்து மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும்.
இந்தத் திருக்கல்யாண விழாவைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.