சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறியதாவது முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் கல்குவாரி, மணல் குவாரி உள்ளிட்ட கனிம வளக் கொள்ளைகள் தொடர்பாக முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனிம வளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு தினசரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கனிம வளங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு ட்ரோன் கேமரா மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். அதேபோல், குவாரி அனுமதி காலம் முடிந்த பின்னரும் ட்ரோன் கேமரா மூலம் கணக்கீடு செய்து முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றார்.

கட்டுமானத் துறைக்கு தேவையான மணல் போதுமான அளவில் கிடைப்பதாகவும், மாநிலத்தில் மணல் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ இல்லை என்றும் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி காரைக்குடியை தலைநகரமாக மாற்றுவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து உரிய நேரத்தில் அரசு முடிவுகளை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
காவேரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.