கோவில்பட்டி: இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான். மலையின் மெளனத்தைவிட எங்கள் தலைவர் விஜயின் மௌனம் கடினமானது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தப்பாட்டம் பரதநாட்டியம் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  த. வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டனர். மருத்துவ உதவி தொகை, கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரங்கள், இலவச

இஸ்திரி பெட்டிகள் மற்றும் 1500பேருக்கு இலவச அரிசி பை என சுமார்  20 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். 

த. வெ. க. பரப்பரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில்  தமிழக வெற்றி கழகம் இன்று பெற்றுள்ள வெற்றி இந்திய துணை கண்டத்தில் எந்த கட்சியும் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை. அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது, எம்ஜிஆர் ஆட்சியை பிடிக்க 5 ஆண்டுகள் ஆனது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே  முதல்வர் விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த வரலாற்றினை இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த தலைவரும் எடுத்ததில்லை. 

எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சாமானியர்கள், எங்களுக்கு அரசியல் பின்புலம் இல்லை. ஜாதி,மத  பணம் பின்புலம் இல்லை, எந்த மூலதனம் இல்லாமல் மக்களையே மூலதனமாக கொண்டு தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி ஆட்சிக்கு வந்தார் எங்கள் தலைவர் முதல்வர் ஜோசப் விஜய். 

அன்று என் டி ஆர் ஆந்திராவில் வெற்றி பெற்றார். அவர் ஆந்திராவில் நிகழ்த்திய அதிசயத்தை இன்று முதல்வர் விஜய் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு த. வெ. க. பெயரை சொல்வதற்கு அன்று நடுக்கம் இருந்தது. எங்கள் தலைவர் பெயரை சொல்வதற்கு அவர்களுக்கு தயக்கம் இருந்தது.

ஆனால் இன்றைக்கு எங்கள் தலைவர் பெயரை சொல்லாமல் ஒரு நாளை நகர்த்த முடியாமல் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் முதல்வர் விஜய் இன்றைக்கு அரசியலை ஆக்கிரமித்துள்ளார். 

கொளத்தூர் தொகுதியில் அதிகாரத்தில் இருந்த மு.க ஸ்டாலின் தோற்றுப் போனார். 1967ல் 16 அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள். 2026ல் 15 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய கட்சி த.வெ.க.

இன்றைக்கு அவர்கள் திரிச்சங்கு நிலையில் உள்ளனர். திமுக காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தொண்டர்கள் இழந்து விட்டனர்.  

த. வெ. க. ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடி அடிப்படை. மு க ஸ்டாலின் முதல்வராக இருந்து போது நித்தம் நித்தம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு  முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். பெண்கள் இன்றைக்கு பாதுகாப்பான நிர்வாகத்தின் கீழ் இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். 

காவேரி பிரச்சனை, மேகதாது பிரச்சனையில் தமிழக முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  திருத்தங்களை சொன்ன போது, முதல்வர் விஜய் எவ்வித கால்ப்புணர்ச்சி இல்லமால் அந்த திருத்தத்தை தீர்மானத்தில் சேர்த்துக் கொண்டார். முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை மலையை விட பெரியது.

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்பதால்  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டத்திலிருந்து ஒருவர் கூட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நடிகை பெயரை கூறியதும்  இரட்டை அர்த்தத்தில் பேச ஆரம்பித்தார். எதிர் கட்சித் தலைவர் என்பது ஒரு நிழல் அமைச்சரை போன்றது.

எந்த தரவுகளையும், ஆதாரத்தையும் சட்டமன்றத்தில் சொல்லி , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கடமையை செய்வதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்று  உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்  எங்களுக்கா கொள்கை இல்லை, எங்களுக்கு இருப்பது போன்ற கொள்கை உங்களுக்கு இல்லை, பாஜகவின்  காலில் விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  மோடி காலை காட்ட மாட்டேங்கிறார். கால் உங்களுக்கு சிக்கவில்லை. திமுகவிற்கு பாஜகவுடன் கள்ளக்காதல் இருக்கிறது என்பதை  முதலில்  அறிவித்தவர் எங்கள் தலைவர் விஜய். இன்றைக்கு திமுக ஒன்றிய அரசு எதிர்த்து ஏன் போராடவில்லை.

தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து தமிழக வெற்றி கழகம் போராடுகிறது, சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. திமுக என்ன செய்யப் போகிறது. தன்னுடைய பேரன் பட்டம் பெறுகிறார் என்று லண்டன் சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின்  தங்களது எம்பிக்களுடன் காணொளியில் கலந்துரையாடும் போது தொகுதி மறுவரையறை குறித்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பாஜகவை கண்டித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம், நமது திருத்தத்தை ஏற்றுக் கொண்டால் தொகுதி மறுவரையரை உரையை ஏற்றுக் கொள்வோம் என்று கூறியவர் தான் மு.க ஸ்டாலின். 

இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான். தமிழக அரசியலில் பெட்டைகளுக்கு அவர் சேவல், நெட்டைகளுக்கு அவர் ஒரு கோபுரம், கட்டைகளுக்கு மத்தியில் எங்கள் தலைவர் சந்தனம், கொட்டைகளுக்கு மத்தியில் எங்கள் தலைவர் கடல், தமிழக அரசியலில் அலட்சிய படுத்த முடியாத அரண் விஜய்.

காலை சிற்றுண்டி பெயருக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை முதல்வர் விஜய் சூட்டினார். ஆனால் தமிழகத்தை பாஜக எப்படி காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று திமுக கருணாநிதி மயமாக்க முயற்சித்தது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றி கழக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படுகிறது.

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் மோடியின் குஜராத்தை விட தமிழகம் இன்றைக்கு முன்னேறுகிறது. 

முதல்வர் விஜய் பேசுவதில்லை என்று அதை ஒரு குறையாக கூறுகின்றனர். மலையின் மெளனத்தைவிட எங்கள் தலைவர் விஜயின் மௌனம் கடினமானது. தேவைப்பட்டால் பேசுவார் தேவை வரும்போது பேசுவார், ஒரு நாள் பேசியதற்கு நீங்கள் ஒன்பது நாட்கள் தூங்கவில்லை, மீண்டும் பேச ஆரம்பித்தால் உங்கள் நிலைமை என்னவாகும்.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை இளைஞர்கள் பொதுமக்கள் கொண்டாடுகின்றனர். என்னுடைய ஏழு வயது பேரன் விசிலுக்கு ஓட்டு போடணும்.தேர்தல் என்றைக்கு வரும் என்று கேட்கிறான் எனத் தெரிவித்தார்.



 

 

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”