சென்னை: 

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய். அரசின் வளர்ச்சிப் பணிகளை மாநிலம் முழுவதும் விரைவுபடுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தென்காசி, விழுப்புரம், நீலகிரி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும், மாவட்ட ரீதியிலான வளர்ச்சிப் பணிகளை அதிவேகமாக கண்காணித்து செயல்படுத்தவும் ஏதுவாக, பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


 

பொதுவாக, தலைமைச் செயலகத்தில் இருந்து மட்டுமே அனைத்து மாவட்டப் பணிகளையும் கண்காணிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பொறுப்பு அமைச்சராக நியமிப்பது கடந்த திமுக ஆட்சியிலேயே நடைமுறையில் இருந்தது. தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, நிர்வாக ரீதியாக பணிகளை இன்னும் தீவிரப்படுத்த இந்த முறையை முழு வீச்சில் கையில் எடுத்துள்ளது.


 

மாவட்ட அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரதானப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடுதல், முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்கள், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் தகுதிவாய்ந்த அனைவருக்கும் சரியாகப் போய் சேருகிறதா என்பதைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்காக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

மாவட்ட வாரியாக எந்தெந்த அமைச்சர்களுக்கு எந்தெந்த மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான பட்டியல் தலைமைச் செயலகத்தால் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நிர்வாக மாற்றத்தின் மூலம், வரும் நாட்களில் தமிழகத்தின் மாவட்ட வாரியான வளர்ச்சிப் பணிகள் புதிய வேகத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் விவரம்: 

விழுப்புரம் & கடலூர் - என் ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், சென்னை & திருவண்ணாமலை ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை - பி. வெங்கட்ராமன் - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், திருவள்ளூர் - ரா. குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்.

திருநெல்வேலி - நெ. மரிய வில்சன் - நிதி, திட்டம் மற்றும் வரிச்சீர் துறை அமைச்சர்.

பெரம்பலூர் - ராஜ்மோகன் - பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், காஞ்சிபுரம் - க. தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திருப்பத்தூர் - R.V. இரஞ்சித்குமார் - வனத்துறை அமைச்சர்.

செங்கல்பட்டு - த. சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், கள்ளக்குறிச்சி - வன்னி அரசு - சமூக நீதித் துறை அமைச்சர்,

இராணிப்பேட்டை - வ. காந்திராஜ் - கூட்டுறவுத் துறை அமைச்சர்

தருமபுரி & அரியலூர் - ப. ராஜ்குமார் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

நாகப்பட்டினம் - A.M. ஷாஜகான் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

தஞ்சாவூர் - வினோத் - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

திருச்சி - ரமேஷ் - இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், கரூர் - சி. விஜயலட்சுமி - பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

நாமக்கல் - த. மனோஜ்குமார் தமிழ்ச்செல்வன் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திருப்பூர் - டாக்டர் K.G. அருண்ராஜ் - மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், நீலகிரி - செ. கமலி - கால்நடைத் துறை அமைச்சர்.

வேலூர் - ம. விஜய் பாஸ்கர் - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர்,  ஈரோடு - K.A. செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கோவை - வே. சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

மதுரை & தேனி - CTR. நிர்மல்குமார் - எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், புதுக்கோட்டை - ஜா. முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், சிவகங்கை - டாக்டர் T.K. பிரபு - இயற்கை வளங்கள் துறை அமைச்சர். கிருஷ்ணகிரி - S. கீர்த்தனா - தொழில்துறை அமைச்சர்.

விருதுநகர் - கு. ஜெகதீஸ்வரி - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், திருவாரூர் - பெ. விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை அமைச்சர், தூத்துக்குடி - ஸ்ரீநாத் - மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்.

இராமநாதபுரம் - பெ. மதன் ராஜா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சேலம் - ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

கன்னியாகுமரி - செ. ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை அமைச்சர், தென்காசி - ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், திண்டுக்கல் - க. விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.

Related

“தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத் துறைக்கு மாற்றம்”