திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் குளங்களை ஆக்கிரமித்து பெருமளவு வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்களை த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தன் ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியை துவக்கினர்.
நீர்நிலைகள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தொகுதி த.வெ.க. பொறுப்பாளர் பாலாஜி, பொள்ளாச்சி சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியாளர் சங்கர், த.வெ.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் மீரா சங்கர் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் உள்ள சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணி துவக்கப்பட்டது.
இந்தப் பணியை த.வெ.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் துவக்கி வைத்தார். த.வெ.க.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.
இதில் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் மீரா சங்கர் பேசியதாவது:

சீமை கருவேலம் என்பது நமது நாட்டு மரம் அல்ல. அது வெளிநாட்டு மரம்.
நமது நாட்டு மரம் வேம்பு, புங்கை, வாகை உட்பட பல மரங்கள் உள்ளன. ஆனால் இந்த சீமை கருவேல மரங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து நீரை உறிஞ்சும் ரவுடி மரமாக செயல்படுகிறது. இந்த மரத்தின் தீமைகள் குறித்து நன்கு உணர்ந்த ஐகோர்ட் உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், தன் ஆர்வலர்களும் இணைந்து இதை அகற்றுவதற்கு முற்பட்டு உள்ளோம்.
இதனால் நீர்நிலைகள் நன்கு பெருகும். குளங்கள் ஏரிகளில் நீர் பெருகி விவசாயம் செழிக்கும். இந்த நல்ல பணிக்கு உறுதுணையாக இருக்கும் திண்டுக்கல் கலெக்டர மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் அவர்களை பாராட்டுகிறேன். இந்தப் பணி முடிந்தால் இந்த குளத்தின் நீரை வைத்து 400 ஏக்கரில் நாம் விவசாயம் செய்ய முடியும். ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் வளம் பெருகும்.
இதற்குப் பின்பு வேம்பு மற்றும் பழம்,பலன் தரும் மரங்களை நாம் நட்டு பயன்படுத்த வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் த.வெ.க நிர்வாகிகள், தன் ஆர்வலர்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.