ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தில் நடைபெற்ற அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
இந்த திருமண விழா நிகழ்ச்சியில் பெரும்பாலும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் பங்கேற்று இருக்கிறார்கள். சில பேருக்கு திட்டங்கள் தெரிந்து இருக்கும். சில பேருக்கு திட்டங்கள் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் நல்ல நிகழ்ச்சியாக இருக்கின்ற இந்த நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.130 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைத்து இருக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி, இந்த நாடே போற்றுகின்ற அளவுக்கு பணியாற்றி தனக்கென ஒரு அடையாளப்படுத்தியவர் நமது தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல்கலாம். அவர்களுக்கு நினைவிடம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை நாங்கள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறோம்.
தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சாலை அமைத்து இந்த மாவட்டம் சுற்றுலாவாக திகழ வேண்டும். சுற்றுலாவில் பயன்பெற வேண்டும். பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சாலை அமைத்து கொடுத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில் இருக்கின்றவர்களுக்கு, அவர்களும் சட்டம் பயில வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லூரியை சுமார் ரூ.80 கோடியில் கட்டிக்கொடுத்து உள்ளோம்.
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி கட்டிக்கொடுத்து இருக்கிறோம். பரமக்குடியில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அ.தி.மு.க. ஆட்சியில் கட்டிக்கொடுத்து இருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் இன்றைக்கு உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்றால் மதுரைக்கு செல்ல வேண்டும். அதை தடுப்பதற்காக இங்கே இருக்கின்ற கழக நிர்வாகிகள், அப்போது இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாவட்டத்திலேயே ஒரு அற்புதமான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுமார் 400 கோடி ரூபாயில் அமைத்து கொடுத்தோம்.

இந்த பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு இந்த பகுதியிலேயே உயர் தர அறுவை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் தரம் உயர்த்தப்பட்டது. பரமக்குடியில் புறவழிச்சாலை அமைத்து கொடுத்து இருக்கிறோம். இந்த பகுதியில் நீர் நிலைகளில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் தடுப்பணைகளை கட்டக்கொடுத்து இருக்கிறோம்.
ஏரி, குளங்கள் நீர் நிலைகள் எல்லாம் நீண்ட காலமாக தூர்வாராமல் இருந்தது. மழைக்காலத்தில் பெய்கின்ற மழைநீரை முழுவதுமாக சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு முழுமையாக வண்டல் மண்ணை இலவசமாக கொடுத்த அரசு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தோம். மாவட்டம் முழுவதும் தனிக்குடிநீர் திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கினோம். பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகின்ற இணைப்பு கால்வாய்களை சுமார் 29 கோடி ரூபாயில் சீரமைத்தோம். பெருமாள் அணை, மன்னார்வளைகுடா கடலோர பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்க 5 கோடி ரூபாய் கொடுத்தோம்.
கீழ்திருவாடனையில் 30 கண்மாய்களை புனரமைக்க, நவீனப்படுத்த 11 கோடி ரூபாய். ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயை நவீனப்படுத்த 11 கோடி ரூபாய். முதுகுளத்தூர் வட்டம், பழங்காய்நத்தம் மற்றும் பழமையாறு வடிநிலப் பகுதிகளின் கீழ் உள்ள 68 கண்மாய்களுக்கு வரத்து கால்வாய் நீர்திறப்பு ரூபாய் 34 கோடியில் அமைத்து கொடுத்தோம்.
அதுமட்டுமல்ல இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டம், நீர் பற்றாக்குறை மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை முழுக்க முழுக்க 14 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசின் உதவியோடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை நான் நேரடியாக வந்து புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தேன் என உரையாற்றினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.