நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் தேமுதிகவுக்கு மட்டும் அதிக இடங்கள் கொடுத்தது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வைத்த விமர்சனத்துக்கு, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா பதில் அளித்துள்ளார்.

தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ”தேமுதிகவின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழா இது, தேமுதிகவுக்கு பொன்னான நாள். தமிழ்நாடு முழுவதும் இதனை கொண்டாடுகிறோம். கேப்டன் எந்த இலட்சியத்திற்கு இந்தக் கட்சியினை ஆரம்பித்தாரோ, அந்தக் கனவை தொண்டர்களுடன் இணைந்து வென்றெடுப்போம். தேமுதிக தொடக்க நாள், விநாயகர் சதுர்த்தியுடன் இணைந்து வந்துள்ளது” என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு. நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். திமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கும், இரு தொகுதிகளுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும்” என்றார்.

திமுக கூட்டணியில் நீண்ட நாள்களாக இருந்த எங்களைவிட, தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுத்தார்கள் என திருமாவளன் பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இது மட்டுமல்ல; பல்வேறு விஷயங்களுக்கு வரும் 16 ஆம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பின் பதிலளிக்கிறேன்” என்றார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”