சென்னை: தனது அரசியல் நிலைபாடு குறித்த இரண்டு நாட்களுக்கு பிறகு தெரிவிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர் சந்தித்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி அல்லது தனி இயக்கத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அண்ணாமலையின் இன்றைய டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த நேரத்தில் அண்ணாமலை திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். மேலும் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் மூலம் மாநில முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். இதன் காரணமாக இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவையும் உருவாக்கினார்.

ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததை தொடர்ந்து மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தமிழக பாஜகவுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இந்த கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையே அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில், இதுகுறித்து அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லி புறப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர்களை அண்ணாமலை சந்தித்த பிறகு தனது நிலைபாட்டை தெளிவுபடுத்துவாரா? அல்லது புதிய அரசியல் கட்சியை தொடங்குவாரா? என எதிர்பார்ப்பு தமிழ்நாடு அரசியலில் அதிகரித்துள்ளது.

இதனிடையே, சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையிடம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இரண்டு நாட்களுக்கு பிறகு பேசுவோம், இப்போது எதுவும் கூற முடியாது" என்று மட்டும் கூறிவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related

“தன்மீது என்ன பழி சுமத்தினாலும் மக்களுக்கு நல்லதே செய்வேன் : முதல்வர் விஜய் உறுதி!”