லண்டன் : வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 9-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிரணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக, அந்த அணியின் கேப்டன் நிகார் சுல்தானா 27 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய கிம் கார்த் சோஃபி மோலினக்ஸ், எல்லீஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து பேட்டிங் செய்த ஆஸி. அணி 9.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜார்ஜியா ஹோல் 45 ரன்களும், எல்லீஸ் பெர்ரி 19 ரன்களும் எடுத்தார்கள்.

பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்திய எல்லீஸ் பெர்ரி ஆட்ட நாயகி விருது வென்றார். இந்த வெற்றியுடன் குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இந்த அபார வெற்றியினால், ஆஸ்திரேலிய அணி ரன் ரேட் அடிப்படையில் +3.875 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது.

Related

“தமிழகத்தின் பாரம்பரிய கபடி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்”