விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு: மேலரத வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி ஆய்வு: உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை (Infrastructure & Cleanliness), வளாகத் தூய்மை, மின்சார வசதி, உணவு மற்றும் குடிநீர் பராமரிப்பு (Food & Drinking Water) குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உபகரணங்கள் குறித்தும், விடுதியில் முதலுதவி பெட்டி (First Aid Box) இருப்பு நிலை குறித்தும்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாணவர்களுக்கு கால அட்டவணைப்படி, சமைக்கப்படும் உணவுகளின் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி அலுவலக ஆய்வுக் கூட்டம்: நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதிகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பாப்பன்குளம் கண்மாய் சீரமைப்புப் பணி: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் (KNUD) கீழ், ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பன்குளம் கண்மாய் சீரமைக்கப்படும் பணி  நடைபெற்று வருகிறது. கண்மாயைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.

தூய்மைப் பணி  மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் ஆய்வு: தொடர்ந்து, பாளையம்பட்டி பகுதியில் நடைபெற்று வரும்  தூய்மைப் பணிகளை (Cleanliness Drive) மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தார். குப்பைகளை ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதார கழிவு மற்றும் சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகைகளாக பிரித்து திடக்கழிவு மேலாண்மை பின்பற்றுவதை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related

“கிருஷ்ணகிரியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ”