சிவகங்கை: சிவகங்கை நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு அறை இன்று திறந்து வைக்கப்பட்டது.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை, சிவகங்கை நகர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி. எம். துரைஆனந்த் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

சிவகங்கை நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் அனைத்தும் இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படவுள்ளன. இதன் மூலம் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் அவசரகால சூழ்நிலைகளை விரைவாக கையாளுவதற்கு காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர், சிவகங்கை நகர் காவல்துறை அதிகாரிகள், நகராட்சி உதவி பொறியாளர், சுகாதார அலுவலர், சுகாதாரப் பணியாளர்கள், பட வரைவாளர், வொர்க் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள், சிசிடிவி அமைப்பு பணிகளை மேற்கொண்ட மதுரை பேச்சியம்மன் காண்ட்ராக்டர் நிறுவன நிர்வாகி திரு. தினேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சிவகங்கை நகரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, நகரின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.